நாட்டில் மதுபான நுகர்வு 9.5% வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024ம் ஆண்டின் முதல் 10 மாதங்களில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
மதுவரி 14% அதிகரிக்கப்பட்டதன் விளைவாக இந்த மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 2023ம் ஆண்டில் 28.2 மில்லியன் லீட்டராக பதிவான மதுபான நுகர்வு, 2024ம் ஆண்டில் 27.2 மில்லியன் லீட்டராக குறைந்துள்ளது.
எனினும், 2024ம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மாத்திரம் மதுவரி வருவாய் 167.7 பில்லியன் ரூபாவாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20.8% அதிகரிப்பு என்பதுடன், 2023ம் ஆண்டின் இதே காலப்பகுதியில் மதுவரி வருமானம் 138.8 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்ததாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதுபானம் குறைவாக நுகரப்படுவதால் சாதகமான சமூக மற்றும் ஆரோக்கிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மதுபோதையில் ஏற்படும் விபத்துகள், குடும்ப பிரச்சினைகள் மற்றும் உடல்நல பாதிப்புகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.




