உக்ரைன் மீது ரஷ்யா ஒரே இரவில் 267 ட்ரோன்களை ஏவி பெரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு எதிராக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் விமானப் படையின் செய்தித் தொடர்பாளர் யுரி இக்னட் இது குறித்து தெரிவிகையில், “ரஷ்யா ஏவிய 267 ட்ரோன்களில் 138 ட்ரோன்களை இடைமறித்து தாக்கி அழித்துள்ளோம். 119 ட்ரோன்கள் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் வீணாகிவிட்டன. எனினும், எஞ்சிய 10 ட்ரோன்கள் பல்வேறு நகரங்களில் தாக்குதல் நடத்தியிருக்கலாம்” என்று தெரிவித்தார்.
மேலும், ட்ரோன் தாக்குதலுடன் சேர்த்து ரஷ்யா மூன்று நீள தூர ஏவுகணைகளைவிடும் தாக்குதல் மேற்கொண்டதாகவும், இதனால் உக்ரைனின் ஐந்து முக்கிய பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக ஆயுதப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறுகையில், “ஒரே இரவில் 200க்கும் அதிகமான ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யா நடத்தியுள்ளது. இது ஒரு பயங்கரமான தாக்குதலாகும். ரஷ்யாவின் இந்த வான்வழித் தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன். உக்ரைனுக்கு ஆதரவாக சர்வதேச நாடுகள் உறுதியாக துணை நிற்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.




