தேசிய வெசாக் பண்டிகையை நயினாதீவில் நடாத்துவதனை நிறுத்த வேண்டும் என கஜேந்திரகுமார் எம்பி பாராளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் உரையாற்றுகையில்,
நாங்கள் கோவிட் பெருந்தொற்றுப் பற்றிப் பேசுகிறோம். சுகாதார அமைச்சர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். இப்பாரதூரமான விடயங்கள் முடிவிற்கு கொண்டுவர வேண்டும். அரசாங்கம் தங்களால் முடிந்ததனைச் செய்வதாகக் கூறிவருகிறது.
யாழ்ப்பாணத்தில் சமய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறபோது அரசாங்கம் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கிறது. இவ்வகையில் நாச்சிமார் கோவில் தலைவரையும் செயலாளரையும் கைது செய்திருக்கிறது.
இதுதான் நிலமையெனின் நயினாதீவில் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய வெசாக் பண்டிகை கொண்டாட்டங்கள் அங்கு நடைபெற முடியாது. நாட்டிலுள்ள பாரதூரமான நிலமைகளை கவனத்திற் கொண்டு இவற்றை நிறுத்துமாறு கோருகிறேன்.
நயினாதீவில் வெசாக் பண்டிகை கொண்டாட்டத்தை நடத்துவதாக அறிவிக்ப்பட்டபோது அதனை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சேபிக்கவில்லை.
ஆனால் இப்போதுள்ள பாரதூரமான நிலமையை கவனத்திற்கொண்டு அதனை நிறுத்துமாறு கோருகிறேன். அவ்வாறு செய்யாதவிடத்து தேவையற்ற வகையில் இனமுரண்பாடுகள் ஏற்படுவதனை தவிர்க்க முடியும். இவ்விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் நடந்துகொள்ளும் என நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.




