லெபனானுக்குள் அதிரடியாக நுழைந்து ஹிஸ்புல்லா தளபதியை கைது செய்த இஸ்ரேல்

Date:

இஸ்ரேலிய கடற்படை கொமாண்டோக்கள் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் வடக்கு லெபனானின் கடற்கரை நகரில் மின்னல் வேக தரையிறக்க நடவடிக்கையில் ஈடுபட்டு, ஒரு ஹிஸ்புல்லா அதிகாரியை கைது செய்துகொண்டு, பத்திரமாக வெளியேறியுள்ளனர்.

இஸ்ரேலில் இருந்து வெகு தொலைவிலுள்ள கடற்கரை நகரத்தில், இஸ்ரேலிய கொமாண்டோக்கள் அசாதாரண நடவடிக்கை மேற்கொண்டு இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

லெபனான் ஊடகங்கள் இஸ்ரேலிய சிறப்புப் படைகள் கடலில் இருந்து வந்து, திரிபோலிக்கு தெற்கே உள்ள பேட்ரூன் கடற்கரையில் ஒரு விடுதியை சுற்றிவளைத்து, ஒருவரை கைது செய்து கொண்டு, படகுகளில் அப்பகுதியை விட்டு வெளியேறியதாக செய்திகளில் தெரிவிக்கின்றன.

லெபனானுடனான இஸ்ரேலின் கடல் எல்லைக்கு வடக்கே சுமார் 140 கிலோமீட்டர் (87 மைல்) தொலைவில் இந்த தாக்குதல் நடந்தது.

கடற்படையின் Shayetet 13 கொமாண்டோ பிரிவு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் பின்னர் உறுதிப்படுத்தின.

இமாத் அம்ஹாஸ் என ஊடக அறிக்கைகளில் பெயரிடப்பட்ட ஹிஸ்புல்லா செயற்பாட்டாளர், பயங்கரவாதக் குழுவின் கடற்படைப் படையில் “குறிப்பிடத்தக்க அறிவு ஆதாரமாக” இஸ்ரேலால் கருதப்பட்டார்.

ஹிஸ்புல்லாவின் கடற்படை நடவடிக்கைகள் குறித்து HUMINT அல்லது மனித உளவுத்துறையில் நிபுணத்துவம் பெற்ற இராணுவ புலனாய்வு இயக்குநரகத்தின் பிரிவு 504-ல் விசாரிக்க அவர் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

உள்ளூர் அல் ஜதீத் செய்தி நிலையத்திடம் பேசிய லெபனானின் பொதுப்பணி மற்றும் போக்குவரத்து அமைச்சர் அலி ஹாமி, அம்ஹாஸ் சிவிலியன் கப்பல்களின் கப்டன் என்றும், சிவில் கடற்படை நிறுவனத்தில் படித்து வருவதாகவும் கூறினார். சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட படங்கள், கப்பல் சீருடையில் அம்ஹாஸ் இருப்பதைக் காட்டியது.

லெபனான் நாட்டுப் பத்திரிகையாளர் ஹசன் இல்லிக், அநாமதேய லெபனான் இராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி, லெபனான் கடற்படை தலையிடுவதைத் தடுக்க, லெபனானில் உள்ள ஐ.நா அமைதிகாக்கும் படைகளுக்குள் செயல்படும் ஜேர்மன் கடற்படையின் ஒருங்கிணைப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படை, இந்த நடவடிக்கையில் ஈடுபடவில்லை, “எந்தவொரு கடத்தல் அல்லது லெபனான் இறையாண்மையை மீறுவதிலும் எந்த தொடர்பும் இல்லை” என்று கூறியது.

அதன் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், “தவறான தகவல் மற்றும் ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவது பொறுப்பற்றது மற்றும் அமைதி காக்கும் படைகளை ஆபத்தில் ஆழ்த்துகிறது” என்று கூறினார்.

இதற்கிடையில், ஒரு மாதத்திற்கு முன்பு தெற்கு லெபனானில் தரைவழித் தாக்குதல் தொடங்கியதில் இருந்து சுமார் 2,000 ஹெஸ்பொல்லா செயற்பாட்டாளர்கள் தரைப்படை மற்றும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக மதிப்பிடுவதாக இஸ்ரேல் இராணுவம் சனிக்கிழமை கூறியது.

இஸ்ரேல் மதிப்பீடுகளின்படி, ஹமாஸ் தனது பயங்கரவாதத் தாக்குதலைத் தொடங்கிய ஒரு நாளுக்குப் பிறகு, ஒக்டோபர் 8, 2023 அன்று ஹிஸ்புல்லாவுடன் மோதல் தொடங்கியதிலிருந்து, கிட்டத்தட்ட 3,000 ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கள்ளமண்காரரை காப்பாற்ற முயன்ற 14 பேர் கைது!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய...

முன்னாள் எம்.பி ஜெயானந்தமூர்த்தி காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இன்று (21)...

செம்மணி புதைகுழி விவகாரம்: உண்மையை வெளிக்கொணர சர்வதேச விசாரணை அவசியம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான உண்மைகளை முழுமையாக வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்