சிறிலங்கா காவல்துறையின் புகழ்பெற்ற அதிகாரியாக இருந்த ஓய்வுபெற்ற பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, ஒரு வருட ஒப்பந்த சேவைக் காலத்திற்கு சிறிலங்கா காவல்துறையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (10) இடம்பெற்ற தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கூட்டத்தின் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஷானி அபேசேகர ஒப்பந்த சேவையின் அடிப்படையில் ஒரு வருட சேவைக் காலத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகவும் கடமையாற்றிய ஷானி அபேசேகர ஒப்பந்த சேவையின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட போதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள கடமை தொடர்பில் இதுவரை அவருக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி பாதியில் நிறுத்தப்பட்டிருந்த விசாரணைகள் ஷானி அபேசேகரவின் முயற்சியால் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.




