தொற்று நோய் தொடர்பான தரவுகளை முகாமைத்துவம் செய்வதிலும், பொதுச் சுகாதார சேவைகளின் செயற்திறனைக் கண்காணிப்பதிலும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் நோக்கில், தரவுகளை ‘EPINet’ தரவுத்தளத்தில் பதிவு செய்தல் தொடர்பான பயிற்சி செயலமர்வொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, கல்முனை பிராந்திய தொற்று நோய்த் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.றிஸ்னீன் முத் அவர்களினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட குறித்த பயிற்சி செயலமர்வு, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரிகள், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மேற்பார்வை பொதுச் சுகாதார தாதியர்கள், மேற்பார்வை பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட விடயப் பொறுப்பு உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, பிராந்திய சுகாதார தகவல் முகாமைத்துவ பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.என்.எம்.தில்ஷான் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் வீ.வேணிதரன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினர்.
அத்துடன், ‘EPINet’ முறைமையின் பயன்பாடு, தரவுகளை உள்ளிடுதல், அறிக்கைகளை கண்காணித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பான செய்முறைப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. இத்தகைய பயிற்சிகள் தேசிய அளவில் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், தரவுகளின் துல்லியத்தன்மையை உறுதிப்படுத்தவும் பெரிதும் உதவுகின்றமை குறிப்பிடத்தக்கது.




