உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு காரணமாக வெற்றிடமான பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (26) தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
பதில் பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் ஜனாதிபதியிடம் இல்லை.
தற்போதைய பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடமாக இல்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையை மாத்திரம் உயர் நீதிமன்றம் நேற்று (24ஆம் திகதி) பிறப்பித்துள்ளதால், பொலிஸ்மா அதிபர் பதவிக்கு வெற்றிடம் இல்லை என பிரதமர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் பிரதமர் மேலும் குறிப்பிடுகையில்-
“தற்போதைய பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கான அரசியலமைப்பு பேரவையின் முடிவை நீதிமன்றத்தினால் மாற்றியமைக்க முடியாது. பொலிஸ் மா அதிபர் பணியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. எந்தவொரு சட்ட அடிப்படையுமற்றது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதை சபாநாயகர் மற்றும் பாராளுமன்றத்திற்கு நினைவூட்டுகிறேன். இது தொடர்பில் சபாநாயகர் விரைவில் தலையிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என பிரதமர் தெரிவித்தார்.




