தையிட்டியிலுள்ள சட்டவிரோத விகாரையில் வழிபாட்டில் ஈடுபட யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் பொலிசார் கட்டாயம் வர வேண்டுமென பொலிஸ் உயர்மட்டத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்திற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் தமிழ் பொலிசார் கட்டாயம் வழிபாட்டிற்கு வர வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.
நாளை (24) மாலை 4 மணிக்கு தமிழ் பொலிசார் வழிபாட்டுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
தாம் சைவம், கிறிஸ்தவ மதங்களை பின்பற்றுவதாகவும், வேறொரு வழிபாட்டு தலத்துக்கு செல்ல விரும்பவில்லையென குறிப்பிட்ட போதும், அவர்களின் எதிர்ப்பு கருத்தில் எடுக்கப்படாமல், உயரதிகாரிகளின் உத்தரவின் பிரகாரம் வழிபாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தமிழ்பக்கம் அறிந்தது.
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், பொலிசாரின் இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது.




