மின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரித்தலை யாய 04 பகுதியில் நேற்று (14) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாய 04, கிரித்தலையில் வசிக்கும் 17 வயதுடைய கௌசிகா சாமோத்யா என்ற சிறுமியே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயிற்றில் தோட்டா தாக்கியதால் பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக நபர் தலைமறைவாகி விட்டார். துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இதுவரை கைப்பற்றப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் காயமடைந்த சிறுமியின் தாய் கூறியதாவது:
“குடும்பத்தில் இளையவளான என் மகள் இவ்வாறு சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவள் நாற்பது வயதுடைய உள்ளூர் ஆணுடன் காதல் உறவு வைத்திருந்தாள், அவனுடன் ஓடிவிட்டாள்.
ஏறக்குறைய இரண்டு வருடங்கள் அந்த ஆணுடன், மகள் ஒரே வீட்டில் வசித்து வந்தார். அவனது தொல்லைகளை தாங்க முடியாமல் சில வாரங்களுக்கு முன்பு மகள் வீட்டிற்கு வந்தாள்.
அதன்பிறகு பலமுறை நேரில் வந்தும், போன் செய்தும் அந்த ஆண் மிரட்டினார். தன்னுடன் வாழ வருமாறு அவர் மிரட்டினார். மகள் மறுத்து விட்டார். இதனால், இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது என்றார்.
நேற்று இரவு குறித்த சிறுமியும் அவரது தாயும் தனது குடும்பத்துடன் பக்கத்து வீட்டிற்கு புத்தாண்டு விருந்துக்கு சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் முன்பக்க கதவுக்கு அருகில் உள்ள நாற்காலியில் சிறுமி அமர்ந்திருந்த போது, குறித்த நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமியின் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், உடனடியாக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.




