கேரளாவைச் சேர்ந்த பிரபல மலையாள நடிகை பாவனா மேனன், கடந்த 2017ஆம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் தீலிப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக அந்த வழக்கு நடைபெற்று வருகிறது. பாவனா காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதை குற்றம்சாட்டப்பட்டவர்களே வீடியோவும் எடுத்திருந்தனர். அந்த வீடியோ அடங்கிய மெமரி கார்டு வழக்கின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே கோர்ட் கஸ்டடியில் இருந்த அந்த மெமரி கார்டில் இருந்து பாலியல் துன்புறுத்தல் வீடியோ லீக் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட நடிகை பாவனா கோரிக்கை விடுத்திருந்தார். அது சம்பந்தமான விசாரணைக்காக அந்த மெமரி கார்டு ஃபாரன்சிக் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அந்த மெமரி கார்டில் 8 வீடியோ ஃபைல்கள் உள்ளதாகவும், முதன் முதலாக 2018 ஜனவரி 9ஆம் திகதி மெமரிகார்டு முதன் முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் ஃபாரன்சிக் பரிசோதனையில் தெரியவந்தது. 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 13இல் இரண்டாவது முறையாக அந்த மெமரி கார்டு பயன்படுத்தப்பட்டதாகவும், கடைசியாக 2021ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் திகதி மதியம் 12.19 மணிமுதல் 12.54 மணி வரை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், விவோ கம்பெனி மொபைல் போனில் மெமரிகார்டை உபயோகித்து வீடியோ பார்க்கப்பட்டதாகவும் பரிசோதனை முடிவில் தெரியவந்தது.
பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கை தொடக்கத்தில் விசாரித்த அங்கமாலி மஜிஸ்திரேட் கோர்ட்டிலும், அதன் பிறகு விசாரணை நடைபெற்ற மாவட்ட நீதிமன்றத்திலும், இப்போது விசாரணை நடைபெற்றுவரும் நீதிமன்றத்தின் கஸ்டடியிலும் மெமரி கார்டு இருந்த சமயத்தில் ஹாஸ் வேல்யூ மாற்றபட்டதாக பரிசோதனை முடிவு மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மெமரிகார்டு பரிசோதனை சம்பந்தமான தனது மனு மீதான விசாரணை குறித்த ரிப்போர்ட்டின் நகல் வேண்டும் என பாதிக்கப்பட்ட நடிகை பாவனா, கேரளா ஐகோர்ட்டில் கடந்த பெப்ரவரி மாதம் மனு தாக்கல் செய்திருந்தார். நடிகை அளித்திருந்த மனுவை ஐகோர்ட் உத்தரவுபடி மாவட்ட நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட நடிகை கூறியதுபோன்று சட்டத்துக்கு புறம்பாக மெமரி கார்டு பயன்படுத்தப்பட்டுள்ளதை நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. மெமரி கார்ட் ஹாஷ் வேல்யூ(Hash Value) மாற்றபப்ட்டுள்ளதாக தெளிவானதை அடுத்து ஐகோர்ட்டில் இருந்து பெறப்பட்ட விசாரணை அறிக்கையை படித்தபோது ஏற்பட்ட மன வேதனையை நடிகை பாவனா சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
மெமரி கார்டில் உள்ள கோப்புகளின் உள்ளடக்கங்களை அடையாளம் காணும் தனித்துவமான எண் மதிப்புகள் ஹாஷ் வேல்யூ ஆகும். இது கோப்புகளுக்கான கைரேகை போன்றது. கோப்பின் உள்ளடக்கங்கள் மாற்றப்பட்டால் ஹாஷின் வேல்யூவும் மாறும்.
பாவனாவின் சமூக வலைத்தள பதிவில் This is unfair and shocking என்ற தலைப்பில் கூறியுள்ளதாவது, “கோர்ட் விசாரணைய அறிக்கை எனக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியுரிமை என்பது ஒரு நபரின் அடிப்படை உரிமையாகும். அந்த உரிமை நீதிமன்றத்தில் மெமரி கார்டின் ஹாஷ் வேல்யூ மாற்றப்பட்டதன் மூலம் மறுக்கப்பட்டுள்ளது. எனது தனியுரிமை கோர்ட்டில் பாதுகாக்கப்படவில்லை என்பதை பயத்துடன் நான் உணர்கிறேன். பாதிப்புக்குள்ளான நபரின் நீதிக்கு அரணாக இருக்க வேண்டிய கோர்ட்டில் இருந்து இப்படி ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது. இதனால் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது என்று அர்த்தம் அல்ல. நேர்மையான நீதியின் காலம் முடிந்து விடவில்லை என்ற நம்பிக்கையுடன் சட்ட போராட்டம் தொடரும். சத்யமேவ ஜெயதே” என அந்த பதிவில் கூறியுள்ளார்.




