ட்ரெட்வின் ஷேர் என்ற பெயரில் சட்டவிரோத பிரமிட் வகை நிதி வியாபாரத்தை நடத்தி, கலென்பிந்துனுவெவ பிரதேச மக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி 500 கோடி ரூபாவை மோசடி செய்த நபரொருவரும் அவரது கள்ளக்காதலியும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டு கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் “ட்ரெட்வின் ஷேர்” என்ற பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி பணத்தை மோசடி செய்துள்ளார். பின்னர் கடந்த இரண்டரை வருடங்களாக தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.
இவர் மக்களை ஏமாற்றி கண்டி பிலிமத்தலாவ பிரதேசத்தில் தனது கள்ளக்காதலியுடன் தங்கியிருந்து மக்களிடம் மோசடி செய்த பணத்தில் காணிகள் மற்றும் வாகனங்களை வாங்கி மிக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கள்ளக்காதலியின் பெயரில் 80 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையும் பராமரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மோசடி செய்யப்பட்ட பணத்தை முதலீடு செய்த குற்றச்சாட்டில் அவரது கள்ளக்காதலியும் கைது செய்யப்பட்டார். அவர் பிரபல தொலைக்காட்சி நடிகையாவார்.
கைது செய்யப்பட்ட 39 வயதுடைய நபரும் அவரது கள்ளக்காதலியும் நேற்று (27) பிற்பகல் நாரஹேன்பிட்டியில் உள்ள சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
சந்தேகநபர் பட்டதாரி என்பதுடன் ஆசிரியராக கடமையாற்றியவர் என்பதுடன் தென் மாகாணத்தில் உள்ள முக்கிய பிரசித்தி பெற்ற ஆலயமொன்றின் பஸ்நாயக்க நிலமேயாகவும் கடமையாற்றியுள்ளார்.




