மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவரின் சகோதரர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட வேண்டியிருந்த போதிலும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கும் இடவசதியின்மையினால் அவரை காப்பாற்ற முடியாமல் போய் விட்டதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குமார விக்கிரமசிங்க தெரிவித்ததாக தென்னிலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று கேகாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வைத்தியர் குமார விக்கிரமசிங்க இவ்வாறு பதிலளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நாங்கள் இலங்கையில் எல்லா இடங்களிலும் முயற்சித்தோம். தீவிர சிகிச்சை பிரிவில் ஒரு படுக்கையை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று வைத்தியர் குமார விக்கிரமசிங்க கூறினார்.
மாவனெல்லை ஆதார மருத்துவமனையில் கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்விடுதிக்கு பொறுப்பான வைத்தியரின் சகோதரர் நோய்வாய்ப்பட்டு 24 ஆம் திகதி மாவனெல்லை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அடுத்த நாள் (25) அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட வேண்டியிருந்த போதிலும், பல வைத்தியசாலைகளில் முயன்றும், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க வெற்றிடம் இருக்கவில்லை.
பின்னர் அவர் திடீரென மாரடைப்பால் இறந்தார் என தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, தற்போதைய நிலைமை குறித்து மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் வைத்தியர் குமார விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.




