மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் எந்தவொரு யோசனையையும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிசீலிக்காது எனவும், சட்டத்தை தவறாகப் புரிந்து கொண்டு ‘பொதுக் கொள்கைத் திட்டங்களின்’ கீழ் இந்த அதிகரிப்பை கொண்டு வந்து பிரேரணையை சமர்ப்பிக்க அமைச்சரவை தயாராகி வருவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (1) தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் முறை சட்டத்தில் தனித்தனியாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ரத்நாயக்க, மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை மின்சார சபையிடமிருந்து கிடைக்கப் பெற்றால் மாத்திரமே அதனை முன்னெடுக்க நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த ரத்நாயக்க, எவ்வாறாயினும், நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு தற்போதைக்கு வாய்ப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (1) விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்திய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.



