வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர் உயிரிழந்திருந்தனர். அவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக பயணித்துக் கொண்டிருந்தன. இதில் முன்னால் சென்ற பேருந்து கட்டுப்பாடை இழந்து விபத்துக்குள்ளானது. அதன் பின்னால் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து விபத்தை தடுக்க வீதியை விட்டு விலகி சென்று நிறுத்தப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவியான நாவலப்பிட்டிய பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் சயாகரி (23), பேருந்து சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் (32), இன்பர்சிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (24) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த மாணவி நாவலப்பிட்டியை சேர்ந்தவர். யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறையில் கல்வி கற்றுக்கற்ற முதலாம் வருட மாணவியான அவர், நேற்றிரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, விபத்தில் உயிரிழந்தார்.
விபத்துக்குள்ளான அதி சொகுசு பேருந்துகளை மீட்கும் பணியை இராணுவத்தினர் இணைந்து பாரந்தூக்கியுடன் துணையுடன் அகற்றினர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



