கல்யாண தோஷமா?: கவலையை விட்டு இதைப் படியுங்கள்!

Date:

பரமேஸ்வரனைக் கணவராக அடைய, உரிய தவத்துடன் பார்வதிதேவி பல காலம் காத்திருப்ப தைக் கண்ட தேவலோக ரிஷிகள் வியந்தனர்.

மிகுந்த பொறுமைசாலிகளான அவர்களே ஒரு கட்டத்தில் பரமேஸ்வரரிடம் போய், ‘‘மகாதேவா… தங்களை மணம் புரிவதற்காக பார்வதிதேவியார் மேற்கொள்ளும் தவமும் சிரத்தையும் எங்களை மிகவும் நெகிழவைத்துவிட்டன. அவரைத் தாங்கள் மணம் புரிந்து உமையரு பாகன் ஆவது எப்போது?’’ என்று கேட்டனர்.

அதற்கு இந்த அகிலத்தைக் கட்டி ஆளும் பரமேஸ்வரன் சொன்ன பதில்: ‘‘குரு பலம் இன்னும் வரவில்லையே!’’

ஆனானப்பட்ட பார்வதிதேவிக்கே இப்படி என்றால், சாதாரணப் பிறவி எடுத்து வாழ்க்கை நடத்தும் நாமெல்லாம் எம்மாத்திரம்? எதற்கும் நேரங் காலம் கூடி வர வேண்டும் என்பார்கள். அதுவும் திருமணம் கைகூடுவது நம் கையில் இல்லையே.

அன்பர்கள் சிலருக்குக் கல்யாண வரம் கைகூடுவதில் பல தடைகளும் பிரச்னைகளும் ஏற்படுவது உண்டு. கிரகக் குறைபாடுகளும் காலசர்ப்ப தோஷம், களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம் முதலான தோஷங்களும் திருமணத் தடையை உண்டாக்கும்.

இவ்விதமான தோஷங்கள் – தடைகளுக்கு உரிய தீர்வாகவும், விரைவில் கல்யாணம் கைகூடவும் சுயம்வர பார்வதி ஹோமம் செய்து வழிபடச் சொல்கின்றன ஞான நூல்கள்.

இந்த ஹோமத்துக்கு அரச சமித்து, சர்க்கரைப் பொங்கல், நெய், குங்குமம் ஆகியவற்றைத் திரவியங்களாகப் பயன்படுத்துவார்கள். இவை தவிர, தாமரைப் பூவையும் சேர்த்துக் கொண்டு ஹோமம் செய்தால், ‘மனதுக்கு சந்தோஷத்தைத் தரக் கூடியவரும், தான் மனதில் நினைக்கும் காரியத்தைக் குறிப்பால் அறிந்து நிறைவேற்றக் கூடியவரும், இந்த சம்சார சாகரத்தை சந்தோஷமாகத் தாண்டுவதற்கு உறுதுணையாக இருப்பவருமான வாழ்க்கைத் துணைவர் அமைவார்’ என்கின்றன சாஸ்திரங்கள்.

திருமண வரம் வேண்டுவோர் மட்டுமன்றி, திருமணமாகிக் கருத்து வேறுபாடுகளாலோ வேறு சில காரணங்களாலோ பிரிந்து வாழும் தம்பதியரும் இந்த ஹோமத்தைச் செய்யலாம்.

சரி… இந்தச் ஹோமத்தை உரிய முறையில் செய்யும் அளவுக்குப் போதிய பண வசதி இல்லாத அன்பர்களும் இருப்பார்களே… அவர்கள் என்ன செய்வது? கலக்கம் வேண்டாம். இந்த ஹோமத்துக்கான மூல மந்திரத்தை ஒருநிலைப்பட்ட மனதுடன் பூஜை யறையில் சொன்னாலும் போதும். நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும். அந்த மூல மந்திரம் இதோ:

“ஓம் ஹ்ரீம் யோகினி யோகினி
யோகேஸ்வரி யோகேஸ்வரி
யோக பயங்கரி யோக பயங்கரி
ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய
முக ஹ்ருதயம் மம வசம்“

மேலும், பெளர்ணமி தினங்களில் கீழ்க்காணும் அபிராமி அந்தாதிப் பாடலைப் பாடியும் அம்பாளை வழிபட்டு கல்யாண வரம் பெறலாம்.

“திங்கட் பசுவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒருதவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக் கடலுள்
வெங்கட் பணி அணைமேல் துயில் கூறும்
விழுப்பொருளே!“

spot_imgspot_img

More like this
Related

மட்டு சித்தாண்டி முருகன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்யுமாறு கோரி ஆலயத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் 14 வருடங்கள் ஆகியும் கும்பாபிஷேகம்...

கொள்ளை வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகனுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார மற்றும்...

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்