மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலினால் கந்தூரி நிகழ்வொன்று மீலாத் தினத்தன்று இரவு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கு முன்னதாக மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து மலேசியாவில் இருந்து வருகை தந்த மௌலானா அஷ்ஷேக் கலாநிதி முஹம்மத் அப்துல் காதிர் அல் காதிர் அவர்களினால் சிறப்பான மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.
இதன்போது, நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை, போதனைகள், மனிதநேயம், நல்லொழுக்கம் மற்றும் சமூக நல்லிணக்கம் தொடர்பான பல்வேறு விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டன.
மீலாதுன் நபி பெருவிழாவின் முக்கியத்துவம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்மாதிரியான வாழ்க்கையைப் பின்பற்றுவதன் அவசியம் மற்றும் சமூகத்தில் ஒற்றுமை, சகோதரத்துவம், அன்பு, பரஸ்பர மரியாதை ஆகியவற்றை வளர்த்தெடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் மார்க்கப் போதனைகள் வழங்கப்பட்டன.
மார்க்க சொற்பொழிவைத் தொடர்ந்து நடைபெற்ற கந்தூரி நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மீலாதுன் நபி பெருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறப்பையும் அவர்களின் உயரிய பண்புகளையும் நினைவுகூரும் வகையில் பக்தி மற்றும் ஆன்மீக உணர்வுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




