மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் பொலிஸ் ஜீப் வண்டி மோதிய விபத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் வாகன சாரதி போதை பொருள் பாதித்துள்ளதாக மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டதையடுத்து அவர் பணியில் இருந்து நேற்று புதன்கிழமை (26) இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரியவருவதாவது
கடந்த 24ம் திகதி திங்கட்கிழமை இரவு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய ஜீப் வண்டியில் பொலிசார் மட்டு சிறைச்சாலை பகுதியை நோக்கி வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் சிறைச்சாலைக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவரின் கால் ஒன்று உடைந்து படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பொலிஸ் வாகன சாரதியை கைது செய்தனர்.
இதில் கைது செய்தவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் 25 ம் திகதி செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் நீதவான் விடுவித்தார்.
இந்த நிலையில் குறித்த சாரதியின் மருத்துவ பரிசோதனையில் கஞ்சா போதை பொருள் பாவித்துள்ளார் என வைத்தியர்கள் கண்டறிந்து கொண்டுள்ளதாக மருத்துவ சான்றிதழை பொலிசாரிடம் வழங்கியதையடுத்து இது தொடர்பான விசாரணையை பொலிசார் முன்னெடுத்தனர்.
இதனை தொடர்ந்து குறித்த பொலிஸ் சாரதியை உடனடியாக பணியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக பொலிஸ் தலைமை காரியாலயத்தில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.




