ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரும், உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப், பெப்ரவரி 28 அன்று ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, திரைக்குப் பின்னால் நடந்த உடனடி நிகழ்வுகள் குறித்த தனது விவரங்களைத் தெரிவித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, கமேனியின் இல்லத்தின் மீதான தாக்குதல் நடந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகே நாட்டின் பொறுப்பில் இருந்தவர்களுக்கு அதுபற்றித் தெரியவந்தது.
“குண்டுவெடிப்பு நடந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு உச்ச தலைவர் அலி கமேனியின் மரணம் உறுதி செய்யப்பட்டது,” என்று ஈரானிய ஷூரா கவுன்சிலின் ஒருங்கிணைப்புக் குழுவுடனான சந்திப்பின் போது காலிபாஃப் கூறினார்.
“விடியற்காலையில் இந்தச் செய்தியை அறிவிப்பதையும், அலி லாரிஜானியுடன் இணைந்து மக்களை வீதிகளில் இறங்குமாறு அழைப்பதையும் ஒருங்கிணைக்க நாங்கள் முடிவு செய்தோம்,” என்று அவர் கூறியதாக அதிகாரப்பூர்வ ஈரானிய செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட மூன்று அதிகார அமைப்புகளின் தலைவர்களும் லாரிஜானியும் வந்து சேர்வதற்குள் இரவு 8 மணி ஆகிவிட்டதால், கமெனியின் மரணத்தை மறுநாள் காலையில் அறிவித்துவிட்டு “விரைவாகக் கலைந்து செல்ல” அவர்கள் முடிவு செய்ததாக காலிபாஃப் மேலும் கூறினார்.
இருப்பினும், “வெளிநாட்டு ஊடகங்கள்” ஏற்கனவே கமெனியின் மரணத்தைப் பற்றி செய்தி வெளியிட்டிருந்ததால், தனது முயற்சிகளை அவருடன் ஒருங்கிணைப்பதற்காக அவர் நள்ளிரவில் லாரிஜானியைத் தொடர்பு கொண்டார்.
“முந்தைய திட்டத்தின்படி செயல்படுவது இனி சாத்தியமில்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம். எனவே, விடியற்காலையில் இந்தச் செய்தியை அறிவித்து, மக்களை வீதிகளில் இறங்குமாறு அழைப்பு விடுக்க நானும் அலி லாரிஜானியும் முடிவு செய்தோம்,” என்று அவர் கூறினார். மேலும், தாங்கள் அந்த முடிவை எடுக்காமல் இருந்திருந்தால், “வீதிகளின் நிலைமை வேறு பாதையில் சென்றிருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலும் அமெரிக்காவும் பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கின. அதே நாளில் நடந்த தாக்குதல்களில் ஒன்றில் அலி கமெனி கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து, ஈரானில் உள்ள பல உயர் பதவியில் இருந்த தலைவர்களும் தளபதிகளும் தாக்குதல்களில் உயிரிழந்தனர்.
அவருக்குப் பிறகு அவரது மகன் மொஜ்தபா கமெனி பதவியேற்றார். அவர் இதுவரை பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைந்திருந்ததோடு, பொதுமக்களுக்கான அவரது அறிக்கைகளைத் தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் அவர் சார்பாக வாசித்துக் காட்டி வந்தனர்.




