மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியதாக அப்பகுதி மக்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மானிப்பாய் பொலிஸார், பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, 1997 ஆம் ஆண்டு பிறந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டார்.
சடலத்திற்கு அருகில் பியர் போத்தலும், ஊசி செலுத்த பயன்படுத்தப்படும் சிரிஞ்சும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மேலதிக விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளில்,, அவர் சுமார் மூன்று நாட்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்தவரின் உறவினர்கள் வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும், அவர் சங்கானையில் தனியாகவே வசித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.




