தமிழ் பேசும் தரப்புக்கள் எதிர்கொள்ளும் முக்கிய விவகாரங்களில் ஒன்றிணைந்து செயற்பட ஆறு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன. இன்று (13) கொழும்பு ரேணுகா விடுதியில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டது.
இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகள், தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளில் ஒன்றித்து செயற்பட தீர்மானித்துள்ளன.
இதனடிப்படையில், முதற்கட்டமாக- அதிகாரப்பகிர்வுடன் கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்குவது, மாகாணசபை தேர்தலை விரைந்து நடத்துவது,
வடக்கு, கிழக்கு- மலையகம்- முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் காணிச்சிக்கல்களை தீர்ப்பது ஆகிய விவகாரங்களில் ஒருமித்து செயற்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சி பிரதிநிதிகள் தொடர்ந்து சந்திப்பை நடத்துவதென்றும், அந்த சமயங்களில் முக்கியத்துவம் பெறும் விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயற்படுவதென்றும் தீர்மானித்துள்ளன.




