நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் வெடித்த கைதிகள் மோதல், இன்று (06) காலை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த வன்முறைச் சம்பவங்களில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உட்பட இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வன்முறையின் தீவிரத்தன்மை காரணமாக 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பலரது உடல்களில் துப்பாக்கிச்சூட்டு காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் ஒன்றைச் சிறைவாசி ஒருவர் காட்டிக்கொடுத்ததாகக் கூறப்படும் முறுகல் நிலையே, சுமார் 1,800 கைதிகள் உள்ள இந்தச் சிறைச்சாலையில் இத்தகைய பெரும் வன்முறைக்கு முதற்காரணமாக அமைந்துள்ளது.
நேற்று நள்ளிரவில் அதிகாரிகளால் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த சூழல், இன்று காலை மீண்டும் கைதிகளின் திட்டமிட்ட தாக்குதலால் சீர்குலைந்தது.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.
தற்போதைய நிலவரப்படி, சிறைச்சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், சிறைச்சாலை வளாகத்தில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு, வன்முறையை முழுமையாகக் கட்டுப்படுத்தும் மற்றும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




