தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள முக்தஹான் (Mukdahan) மாகாணத்தில் நடைபெற்ற மத யாத்திரையின்போது, 11 வயது சிறுவன் ஒருவர் தனது பெற்றோரின் பிக்கப் வாகனத்தை ஓட்டி கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விபத்தில் 9 பௌத்த பிக்குகள் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
35 பௌத்த பிக்குகளும், அவர்களுடன் சென்ற ஐந்து பொதுமக்களும் மத யாத்திரையின் ஒரு பகுதியாக சாலையில் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றது.
சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில், விபத்துக்குப் பின்னர் சாலையோரம் சிதறிக்கிடந்த குங்குமப்பூ நிற பிக்குகளின் ஆடைகள், அவர்களது உடமைகள் மற்றும் சேதமடைந்த பிக்கப் வாகனம் காணப்பட்டன.
பொலிஸாரின் தகவலின்படி, சம்பவ இடத்திலேயே ஐந்து பிக்குகள் உயிரிழந்தனர். மேலும் நால்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்தது.
11 வயது சிறுவன் தனது பெற்றோரின் அனுமதியின்றி பிக்கப் வாகனத்தை எடுத்துச் சென்றதாகவும், பின்னர் அதன் கட்டுப்பாட்டை இழந்து பிக்குகள் மீது மோதியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கின் மேலதிக சட்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸ் மேஜர் ஜெனரல் பைரோஜ் தாய்புட்சா தெரிவித்தார்.
“சந்தேகநபர் ஒரு சிறுவன். விபத்திற்கான துல்லியமான காரணத்தை கண்டறிய வாகனம் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது,” என அவர் கூறினார்.
பின்னர் BBC Thai-க்கு அளித்த பேட்டியில், சிறுவன் தற்போது அவரது பாதுகாவலர்கள், மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆரம்ப தகவல்களின்படி, அந்தச் சிறுவன் சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தையாக இருக்கலாம் எனக் கூறப்பட்டாலும், இதுகுறித்த மேலதிக தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த விபத்தில் காயமடைந்த பிக்குகளுக்கு சிகிச்சையளித்து வரும் முக்தஹான் மருத்துவமனை, அவசரமாக இரத்த தானம் வழங்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போது மூன்று பிக்குகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் குறைந்தது ஐந்து பேர் கடுமையாக காயமடைந்துள்ளனர். மற்ற சிலர் லேசான காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் உயிர்தப்பிய பிரா சோம்போங் என்ற பிக்கு, “நாங்கள் ‘புத்தோ, புத்தோ’ என தியான மந்திரத்தை ஜெபித்துக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு சிறுவன் ஓட்டிய பிக்கப் வாகனம் வேகமாக வந்து எங்களை மோதியது. நான் மற்றும் மற்றொரு பிக்கு மட்டும் தப்பிக்க முடிந்தது. அணிவகுப்பில் முன்னால் இருந்த முதல் ஒன்பது பிக்குகள் உயிர்தப்பினர். ஆனால் பின்னால் இருந்தவர்கள் வாகனத்தின் மோதலால் தூக்கி எறியப்பட்டனர்,” என்று தெரிவித்தார்.
தாய்லாந்தில் பௌத்த பிக்குகள் மிகவும் மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்படுகின்றனர். அவர்கள் புத்தரின் போதனைகளை பாதுகாத்து மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்களாக மதிக்கப்படுகின்றனர். மத ஊர்வலங்களின்போது பொதுமக்கள் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை காணிக்கையாக வழங்குவது அந்நாட்டில் வழக்கமாக இருந்து வருகிறது.
இந்தச் சம்பவம் நடைபெற்றபோது, சிறுவன் உடல்நலக்குறைவால் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் தனியாக இருந்ததாகவும், பெற்றோர் வீட்டிற்கு திரும்பியபோது வாகனம் காணாமல் போனதை அறிந்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முக்தஹான் மாகாண ஆளுநர் வொரயன் புன்னராத், இந்த துயரச் சம்பவம் தாய்லாந்து முழுவதும் சாலைப் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கையாக அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
“சாலைப் பாதுகாப்பில் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இந்த சம்பவம் பெற்றோர்கள் உட்பட அனைவருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும். இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.




