இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (24) அமெரிக்க டொலருக்கு எதிராக மேலும் சரிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய நாணய மாற்று விகிதத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை நேற்று செவ்வாய்க்கிழமை பதிவான ரூ. 329.65 இலிருந்து இன்று ரூ. 330.35 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை, விற்பனை விலையும் ரூ. 339.49 இலிருந்து ரூ. 340.06 ஆக உயர்ந்து, ரூ. 340 எல்லையைத் தாண்டியுள்ளது.
இதற்கிடையில், ரூபாய் சில முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக சற்று வலுவடைந்திருந்தாலும், வளைகுடா நாடுகளின் சில நாணயங்களுக்கு எதிராக ஓரளவு பலவீனமடைந்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் காட்டுகின்றன.
வெளிநாட்டு நாணய சந்தையில் தொடர்ந்து நிலவும் ஏற்றத் தாழ்வுகளின் மத்தியில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.




