கனடாவின் பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக, 22-வது பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் (சிஐபி) புலனாய்வாளர்கள் தமிழர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
இந்த மூன்று சம்பவங்களும் மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், சிங்கூசி சாலை மற்றும் குயின் ஸ்ட்ரீட் ஈஸ்ட் ஆகிய பகுதிகளில் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு வழக்கிலும், சந்தேக நபர் தானியங்கி பண இயந்திர (ஏடிஎம்) முகப்பு அறைகளுக்குள் காத்திருந்து, பாதிக்கப்பட்டவர்கள் பணம் எடுத்த பிறகு அவர்களைக் குறிவைத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பணப் பரிவர்த்தனைகளை முடித்தவுடன், சந்தேக நபர் அவர்களைத் தாக்கி அவர்களின் பணத்தைத் திருடிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் முதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பீல் பிராந்தியப் காவல்துறையினர் நடத்திய புலனாய்வுத் தேடுதல் நடவடிக்கையில் சந்தேக நபரை அடையாளம் கண்டு, கண்காணித்ததன் விளைவாக, இறுதியில் அவரைக் கைது செய்துள்ளனர்.
ஜூன் 16 அன்று, நிலையான முகவரி இல்லாத 34 வயதான சுரேஷ்குமாரன் ராஜபுத்திரன் என்பவர், மூன்று ஏ.டி.எம் தொடர்புள்ள கொள்ளைக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, பிணை விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பீல் பிராந்திய காவல்துறை, குடியிருப்பாளர்கள் எல்லா நேரங்களிலும், குறிப்பாக ஏடிஎம்களைப் பயன்படுத்தும்போதும் அல்லது பணம் எடுக்கும்போதும், தங்கள் சுற்றுப்புறங்களைக் குறித்து விழிப்புடன் இருக்குமாறு நினைவூட்டுகிறது.




