மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து வெள்ளிக்கிழமை அறிவித்தது. அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் சுவிற்சர்லாந்து புறப்பாடு ரத்து செய்யப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியானது.
இந்த வாரம் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், ஈரானில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதையும், ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதையும், தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் உள்ளிட்ட பரந்த பிரச்சினைகள் குறித்து 60 நாள் பேச்சுவார்த்தைக் காலத்தைத் தொடங்குவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
அதே நேரத்தில், இந்த ஒப்பந்தம் லெபனானில் சண்டையை நிறுத்துவதாக இருந்தது, ஆனால் இஸ்ரேலிய இராணுவம் வெள்ளிக்கிழமை அன்று அந்நாட்டின் தெற்கில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை அறிவித்தது.
“அமெரிக்கா, ஈரான், கத்தார் மற்றும் பாகிஸ்தான் இடையே திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன,” என்று சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் AFP-க்கு அனுப்பிய செய்தியில் தெரிவித்துள்ளது.
“இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு வசதி செய்து தர சுவிட்சர்லாந்து தயாராக உள்ளது. பர்கன்ஸ்டாக்கில் தொடர்புடைய ஆயத்தப் பணிகள் தொடர்கின்றன,” என்று அது மேலும் கூறியது, ஆனால் பேச்சுவார்த்தைகளுக்கான புதிய திகதியை வழங்கவில்லை.
வியாழக்கிழமை பிற்பகுதியில் வான்ஸின் பயணம் ரத்து செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்ததைத் தொடர்ந்து இது நிகழ்ந்தது. “இந்தப் பேச்சுவார்த்தைகளின் ஏற்பாடுகள் ஒருபோதும் எளிமையானதாகவோ அல்லது கணிக்கக்கூடியதாகவோ இருந்ததில்லை” என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார்.
“முடிந்தவரை விரைவில் தொழில்நுட்பப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க நாங்கள் ஆவலுடன் உள்ளோம்.”
ஈரானில், ஈரானிய தூதுக்குழுவின் சுவிட்சர்லாந்து பயணம் குறித்து “எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை” என்று தஸ்னிம் செய்தி நிறுவனம் கூறியிருந்தது.
இந்த ஒப்பந்தம் அமெரிக்க ஜனாதபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் ஆகியோரால் தனித்தனியாகக் கையெழுத்திடப்பட்டுள்ளது.




