பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை உயர்வால் ஏற்படும் El Niño காலநிலை நிகழ்வு, அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குப் பிறகு உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதன் காரணமாக பல பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இலங்கையில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் சாத்தியம் குறைவாகவே உள்ளதாக காலநிலை அதிகாரிகள் கூறுகின்றனர்.
சுற்றுச்சூழல் அமைச்சின் காலநிலை மாற்ற செயலகத்தின் பணிப்பாளர் லீல் ரந்தெனிய தெரிவித்ததாவது, தற்போது இலங்கை தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தில் உள்ளதுடன், அது செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இடைக்கிடையே கனமழை பெய்யக்கூடும் என்றாலும், மொத்த பருவமழை அளவு படிப்படியாக குறையும் என அவர் கூறினார்.
மேலும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஏற்படும் இடைமழைக் காலத்தில், நாட்டின் ஆண்டு மழைப்பொழிவில் சுமார் 30 சதவீதம் கிடைப்பது வழக்கமானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை கடல்சார் காலநிலை மண்டலத்தில் அமைந்துள்ளதால், அதன் வானிலை அமைப்பை பல்வேறு காரணிகள் நிர்ணயிக்கின்றன. குறிப்பாக மேற்கு இந்தியப் பெருங்கடலின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் நாட்டின் மத்திய மலைப்பகுதிகள் மழைப்பொழிவு பரவலை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று ரந்தெனிய விளக்கினார்.
உலகளாவிய வானிலை அமைப்புகளில் El Niño தாக்கம் மாற்றங்களை ஏற்படுத்தினாலும், தீவு நாடான இலங்கைக்கு கடலிலிருந்து தொடர்ந்து கிடைக்கும் ஈரப்பதம் மற்றும் அதன் புவியியல் அமைப்பு காரணமாக நீண்டகால கடுமையான பாதிப்புகள் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
El Niño நிலை உருவானால், அது அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குப் பிறகு ஆரம்பமாகி வடகிழக்கு பருவமழைக் காலத்துடன் இணைந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் நீர்வள முகாமைத்துவம் தொடர்பாக மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். நீரை சிக்கனமாக பயன்படுத்துவதுடன், அச்சப்படாமல் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்றும், சரியான தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டால் நாட்டால் இந்த நிலையை திறம்பட சமாளிக்க முடியும் என்றும் லீல் ரந்தெனிய வலியுறுத்தினார்.




