பெண்ணொருவருடன் சர்ச்சைக்குரிய உறவு தொடர்பான தொலைபேசி உரையாடல் கசிந்ததை தொடர்ந்து தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமை பொறுப்பை மற்றொருவரிடம் கையளிப்பேன் என வாக்குறுதியளித்து, அப்போது நிலைமையை சமாளித்த செல்வம் அடைக்கலநாதன், இன்று (14) மீண்டும் ரெலோவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்படுவதற்கு வசதியாக, அவருக்கு பொருத்தமான- முறையற்ற விதத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்ற விமர்சனத்தை முன்வைத்து கட்சியின் பல பிரமுகர்கள் இன்றைய தேசிய மாநாட்டை புறக்கணித்துள்ளனர்.
கட்சியின் உப தலைவர் ஹென்ரி மகேந்திரன், பிரசன்னா இந்திரகுமார், சபா குகதாஸ், வினோ நோகராதலிங்கம், புவனேஸ்வரன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இன்றைய கூட்டத்தை புறக்கணித்தனர்.
அத்துடன், முறையற்ற விதமாக இன்று புதிய நிர்வாக தெரிவு நடந்ததற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில், செல்வம் அடைக்கலநாதனின் தொலைபேசி உரையாடலொன்று கசிந்தது. தன்னிடம் நெருக்கமாக இருந்த பெண்ணொருவர் தன்னை விட்டு போய்விட்டார் என மற்றொருவரிற்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி செல்வம் அடைக்கலநாதன் பேசியது அதில் பதிவாகியிருந்தது.
அது தன்னுடைய குரல் பதிவு அல்லவென செல்வம் அடைக்கலநாதன் மறுக்கவுமில்லை.
மாறாக, கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்த போது, நான் அவசரப்பட்டு பேசி விட்டேன் என ஒப்புதல் வாக்குமூலமளித்திருந்தார். அத்துடன், அவரை உடனடியாக கட்சி தலைமையை விட்டு விலக வலியுறுத்திய போது, தனக்கு சிறிய அவகாசமளிக்குமாறும், அடுத்த வருட (இந்த வருடம்) தொடக்கத்திலேயே கட்சி மாநாட்டை நடத்தி, புதிய தலைவரை தெரிவு செய்யுமாறும், அதில் தான் போட்டியிடாமல் இருப்பதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார்.
இதனால், அப்போது அவருக்கு எதிராக கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பு அடங்கியது.
இதை தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்டனர். யாழ் மாவட்ட உறுப்பினர் தெரிவு நடந்த பின்னர், மாவட்ட ரீதியான தெரிவுக்கு எதிராக திருமலை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை செல்வம் அடைக்கலநாதன் தரப்பே பின்னணியில் இருந்து தொடர்ந்ததாக ரெலோவிற்குள் ஒரு பகுதியினர் குற்றம்சாட்டினர். செல்வம் தரப்பு மீள அதிகாரத்தை கைப்பற்ற வசதியாக பொதுக்குழுவை மீள தயார் செய்ய இந்த வழக்கு நாடகம் ஆடப்பட்டதாக குற்றம்சாட்டினார்கள். கட்சியின் தலைமைகுழு கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதனின் முன்பாகவே இந்த குற்றச்சாட்டை சுமத்தினார்கள்.
இதன்பின்னர், முறையாக அறிவிப்புக்கள் விடுக்காமல், மாவட்ட ரீதியாக தெரிவுகளை நடத்தி, தமக்கு தோதான உறுப்பினர்களை நியமித்தனர் என்ற குற்றச்சாட்டு செல்வம் அடைக்கலநாதன் தரப்பின் மீது வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று ரெலோவின் தேசிய மாநாடு நடந்தது. இதில் தலைவராக செல்வம் அடைக்கலநாதன், செயலாளராக கோவிந்தன் கருணாகரம், உப தலைவராக குருசாமி சுரேன், பொருளாராக விஜிந்தன், தேசிய அமைப்பாளராக மயூரன், நிர்வாக செயலாளராக நித்தி மாஸ்டர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இன்றைய நிர்வாக தெரிவுக்கு எதிராக கட்சியின் ஒரு தரப்பு அடுத்து வரும் நாட்களில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக அறிய முடிகிறது.




