எந்தவொரு உலகளாவிய நெருக்கடியும் ஏற்பட்டாலும் கல்வித் துறையை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது என பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
காலி, தாதல்ல பகுதியில் அமைந்துள்ள அல்-முபாரக் கல்லூரிக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டடத்தை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் நேற்று (13) கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தாதல்ல மக்களின் ஒற்றுமையான பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கட்டடம், “Vision 2030” சங்கத்தின் தலைவர் மூலம் பிரதமரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், பாடசாலைகளுக்கும் அவற்றைச் சுற்றியுள்ள சமூகங்களுக்கும் இடையிலான உறவு மிகவும் வலுவானது எனக் குறிப்பிட்டார். எதிர்கால தலைமுறைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து இந்தக் கட்டடத்தை அமைத்த தாதல்ல மக்களை அவர் பாராட்டினார்.
அரசாங்கம் முன்னெடுத்து வரும் கல்வி சீர்திருத்தங்கள், மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப அறிவும் திறன்களும் வழங்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு இடைநிலைப் பாடசாலைக்கும் குறைந்தபட்சம் ஒரு ஸ்மார்ட் போர்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் சுமார் 4,000 பாடசாலைகளுக்கு ஏற்கனவே இணைய வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
மேலும், மீதமுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இந்த ஆண்டின் இறுதிக்குள் இணைய இணைப்பு வழங்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொழில்நுட்பம் பயனுள்ள முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், ஆசிரியர் பயிற்சி திட்டங்கள் மற்றும் இணைக்கப்பட்ட வகுப்பறை (Connected Classroom) முயற்சிகள் மூலம் டிஜிட்டல் கற்றல் வளங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் மீளக் கட்டியெழுப்பப்படும் இந்த காலகட்டத்தில் வளங்கள் குறைவாக இருந்தாலும், புதிய கல்வி சீர்திருத்தங்களையும் தேசிய அபிவிருத்தி இலக்குகளையும் முன்னெடுக்க தேவையான மனிதவளத்தை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் கூறினார்.
“நாடு பொருளாதார ரீதியாக மீண்டு வரும் இந்த நேரத்தில், எந்த சவாலையும் எதிர்கொண்டாலும் கல்வியை பாதுகாக்கும் உறுதிப்பாட்டில் நாம் உள்ளோம். தேசிய அபிவிருத்தியை அடைய பொதுமக்கள், அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒரே இலக்குடன் இணைந்து செயல்பட வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய தொழிற்கல்வி பிரதியமைச்சர் நளின் ஹேவகே, மனிதவள மேம்பாடு தேசிய அபிவிருத்தியின் முக்கிய அங்கமாக அரசால் கருதப்படுவதாகவும், பிரதமரின் தலைமையில் கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் புதிய சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தென் மாகாண ஆளுநர் பேராசிரியர் சுசிரிபால மனவடூ, கடற்றொழில் மற்றும் நீர்வாழ் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகே, காலி மாநகர முதல்வர் சுனில் கமகே, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், பிரதேச மக்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




