முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுக்கு சென்ற போது சமாந்தரமாக, போக்குவரத்து விதிகளை மீறி வீதியில் மோட்டார் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டதாக குறப்பிட்டு மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புத் தலைக்கவசங்கள் இன்றி மோட்டார் சைக்கிள்களில் சென்ற இந்த நபர்கள் குறித்து பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் புத்தூர் சந்தியில் இருந்து கொடிகாமம் ஊடாக கிளிநொச்சி நோக்கிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள்களின் இலக்கத் தகடுகளைக் கொண்டு உரிமையாளர்களைத் தேடி கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், சந்தேகநபர்கள் கடந்த 18ஆம் திகதி விஸ்வமடு சந்தியில் ஒன்றிணைந்து முல்லைத்தீவு வீதியூடாக முள்ளிவாய்க்கால் நோக்கிச் சென்றமை கண்டறியப்பட்டது.
இத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, புதுக்குடியிருப்பு பொலிஸார் இன்று (23) காலை சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் கவனக்குறைவாக மோட்டார் சைக்கிள் செலுத்தியமை, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களைச் செலுத்தியமை மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் அணியாது பயணித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்ள் சுமத்தப்படவுள்ளன.
கைதான மூவரும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.



