மட்டக்களப்பு, ஆரையம்பதி – ஒல்லிக்குளம் பகுதியில் நேற்று (10) மாலை வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் முற்றாகச் சேதமடைந்தது.
மருதமுனையில் இருந்து கொக்கட்டிச்சோலைக்கு வந்த இந்த வாகனம், அங்கிருந்து திருமண வைபவம் ஒன்றிற்காக வெளிநாடு செல்லவிருந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கி புறப்பட்ட போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
வாகனத்தில் பயணம் செய்த ஐந்து பயணிகளும் தீ பரவியதை கண்டவுடன் உடனடியாக வாகனத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேறி விட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு தீயணைப்புப் படையினர், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், வாகனம் முழுமையாக எரிந்தது.
மட்டக்களப்பு தலைமையக தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்தில் சோதனைகளை நடத்தினர்.
இயந்திரக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது..மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



