‘திமுக அதிமுக ஆதரவில் திருமாவளவன் முதல்வர்?’ : மீண்டும் தொடங்கியதா திரை மறைவு காய் நகர்த்தல்கள்?

Date:

விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளரான சிந்தனைச் செல்வன் நேற்று காலையில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்… அதில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு இருந்தவர் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வராக்க வேண்டும் என்னும் கோரிக்கையை வைத்திருந்தார். அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ” தலைவர் திருமாவை முதல்வராக முன்மொழிந்து அதை நோக்கி நகர்த்துவதுதான் திராவிட கட்சிகள் முன்னெடுக்க வேண்டிய சரியான நிலைப்பாடாக இருக்குமென தோன்றுகிறது.

மாற்றம் வேண்டுமென தமிழக மக்கள் உண்மையிலேயே விரும்பியிருந்தால் தன் வாழ்வை மக்களுக்காக அர்பணித்துள்ள அப்பழுக்கற்ற அனுபவம் வாய்ந்த தலைவர் திருமாவை முதல்வர் ஆக்குவதுதான் சரியாக இருக்கும்.

சமூக நீதி மண் இது என்று மார்தட்டிக்கொள்பவர்கள் தமிழ்நாட்டை காப்பாற்ற இப்படி ஒரு முடிவெடுப்பது காலத்தின் கட்டாயம்.” என குறிப்பிட்டு இருந்தார்.

அப்போது யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இப்போது வெளியாகும் சில தகவல்கள் சிந்தனைச் செல்வன் கூறிய கருத்துக்களை நோக்கி நகர்வதாக தெரிகிறது.

தவெக ஆட்சியமைக்க கம்யூனிஸ்டுகள் ஆதரவளித்திருக்கும் நிலையில், விசிகவின் ஆதரவும் தவெகவுக்கு கிடைக்குமா என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கம்யூனிஸ்டுகள் எடுக்கும் முடிவையே நாங்களும் பின்பற்றுவோம் என திருமா கூறியிருந்த நிலையில், கம்யூனிஸ்டுகள் தவெக ஆதரவு தெரிவித்து பல மணி நேரங்கள் ஆன பிறகும் திருமா அமைதி காக்கிறார். திரைமறைவில் என்னதான் நடக்கிறது?

திருமா தவெகவுக்கு ஆதரவு அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் திடீர் அமைதிக்கு காரணம் என்னவென விவரமறிந்தவர்களிடம் விசாரித்தோம். ‘கம்யூனிஸ்டுகளும் திருமாவும் ஒன்றாக இணைந்துதான் நேற்று திமுக தலைவரை சந்தித்திருந்தார்கள்.

அப்போது ஸ்டாலினே அதிமுகவை ஆட்சியில் அமர்த்தும் ஐடியாவை மூவரிடமும் முன்வைத்திருக்கிறார். கம்யூனிஸ்டுகளுக்கு அதில் துளியும் உடன்பாடில்லை. திருமாவுக்கு அது சரிபட்டு வருமென தோன்றவில்லை. அதேநேரத்தில் திமுக கூட்டணியை முறிக்கவும் விருப்பமில்லை. அதனால்தான் கம்யூனிஸ்டுகள் எடுக்கும் முடிவை பின்பற்றுவோம் என அறிவித்தார்.

கம்யூனிஸ்டுகள் தேசிய தலைமையோடு ஆலோசித்து விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் முடிவை எடுத்துவிட்டனர்.

இந்நிலையில்தான், திருமாவும் தவெகவுக்கு ஆதரவாக போய் விஜய் ஆட்சியமைப்பதை திமுக விரும்பவில்லை என்கிற தகவல் வெளியானது . அதனால் திருமாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கினர்.

எ.வ.வேலு இந்த முறை திருமாவை அணுகினார் என்கிறார்கள் . எ.வ.வேலு வீட்டில் நடந்த அந்த மீட்டிங்கில் ‘அதிமுகவும் நாங்களும் சேர்ந்து உங்களை முதல்வர் ஆக்குகிறோம். விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் முடிவை பரிசீலியுங்கள்’ என ஒரு ஜாக்பாட்டை திருமா முன் வைத்திருப்பதாக வெளியானது புதிய தகவல்..

திருமாவும் கட்சியுடன் ஆலோசித்துவிட்டு வருகிறோம் எனக் கூறிவிட்டு வந்துதான் Zoom இல் கட்சி மீட்டிங்கை நடத்தினார். விஜய்யுடன் செல்வதை விட திமுக ஆபரை ஏற்பதே எதிர்காலத்துக்கு நல்லது என சில முக்கிய நிர்வாகிகள் திருமாவின் மனதை கரைக்க, மீட்டிங் முடித்த கையோடு திருமா ஸ்டாலினை சந்திக்க சென்றுவிட்டார்.

அந்த சந்திப்பில் இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆகுமா? எடப்பாடி இதை ஏற்பாரா? மக்களின் மனநிலை என்னவாக இருக்கும் என திமுக தலைமையும் திருமாவும் நீண்ட நேரம் பேசியிருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்துதான் தங்களின் முடிவை நாளை காலை அறிவிப்போம் என விசிக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது’ என்கின்றனர் திரைமறைவில் நடக்கும் காய் நகர்த்தல்களை அறிந்தவர்கள்.

இன்னொரு புறம் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கம்யூனிஸ்டுகளிடம் நிலைப்பாட்டை மீண்டும் பரிசீலிக்கும்படியான ஒரு கோரிக்கையும் திமுக தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதிமுக தரப்பையும் இந்த விஷயத்தில் சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியும் தொடங்கப்பட்டுள்ளது என்கிறார்கள் இரு கட்சிகளின் உள்விவரம் அறிந்த சிலர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

குதிரை பேரத்தில் இறங்கியது விஜய் கட்சி

மன்னார்குடி தொகுதியின் அமமுக எம்எல்ஏ காமராஜின் பெயரை கொண்ட போலியான ஆதரவு...

விஜய் ஆட்சி அமைக்க விசிக ஆதரவு: தவெக பலம் 120 ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இடதுசாரிகள் ஆதரவளித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்