தொடர்ந்து நடைபெற்று வரும் சர்வதேச மோதல் காரணமாக அதிகரித்து வரும் உலகளாவிய எரிசக்தி செலவுகள் காரணமாக, லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலையை உயர்த்தியுள்ளது.
உலக சந்தை விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் உயர்வு இறக்குமதி செலவுகளை கணிசமாக உயர்த்தியுள்ளது என்று அந்நிறுவனம் கூறியது. இருப்பினும், வரவிருக்கும் புத்தாண்டு காலம் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு, முழு சுமையையும் நுகர்வோர் மீது சுமத்தாமல் விலை உயர்வை மட்டுப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, கொழும்பு மாவட்டத்திற்கான திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு:
12.5 கிலோ சிலிண்டர்: ரூ. 775 உயர்த்தப்பட்டு ரூ. 4,765 ஆக
5 கிலோசிலிண்டர்: ரூ. 308 உயர்த்தப்பட்டு ரூ. 1,910 ஆக
2.3 கிலோ சிலிண்டர்: ரூ. 140 உயர்த்தப்பட்டு ரூ. 890 ஆக
இதற்கிடையில், தடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய போதுமான கையிருப்பு உள்ளது என்று லிட்ரோ உறுதியளித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக ஓர்டர் செய்யப்பட்ட 38,000 மெட்ரிக் தொன் எல்பி எரிவாயு தற்போது மாலைதீவில் மிதக்கும் சேமிப்பில் உள்ளது என்றும், இது நாடு முழுவதும் தொடர்ச்சியான விநியோகத்தை சாத்தியமாக்குகிறது என்றும் அந்நிறுவனம் கூறியது.
மேலும், லூயிஜி கல்வானி கப்பல் 20,000 மெட்ரிக் தொன்களுடன் மாலைதீவை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும், அதே நேரத்தில் ஃபிரேசினெட் கப்பல் கூடுதலாக 20,000 மெட்ரிக் தொன்களுடன் தென் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் அது தெரிவித்தது. இந்த சரக்குகள் மே மாதம் வரை சீரான விநியோகத்தை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதில் நிறுவனம் உறுதியாக உள்ளது என்று தலைவர் சன்ன குணவர்தன கூறினார்.



