மொஸ்கோவில் மூத்த ரஷ்ய இராணுவ புலனாய்வு அதிகாரி விளாடிமிர் அலெக்ஸீவை சுட்டுக் காயப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு ரஷ்ய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய FSB பாதுகாப்பு சேவை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
60 வயதுடைய அந்த நபர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தப்பிச் சென்ற பிறகு “கைது செய்யப்பட்டு ரஷ்யாவிடம் ஒப்படைக்கப்பட்டார்”. அந்த நபர் டுபாயில் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் சந்தேகத்திற்குரிய ஒரு கூட்டாளி மொஸ்கோவில் கைது செய்யப்பட்டார், மற்றொருவர் உக்ரைனுக்கு தப்பிச் சென்றதாக FSB ஐ மேற்கோள் காட்டி ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்தன.
பெப்ரவரி 2022 இல் ரஷ்யா தனது அண்டை நாடு மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவிலும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பிரதேசத்திலும் பல உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் GRU இராணுவ புலனாய்வு சேவையின் துணைத் தலைவரான அலெக்ஸீவ் வெள்ளிக்கிழமை மொஸ்கோ அடுக்குமாடி குடியிருப்பில் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சைபர் தாக்குதல்களில் அவர் ஈடுபட்டதாகவும், 2018 ஆம் ஆண்டு பிரிட்டனில் ரஷ்யாவை விட்டு வெளியேறிய செர்ஜி ஸ்க்ரிபால் மீது நரம்புத் தாக்குதலை ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காக அவர் மேற்கத்திய நாடுகளின் தடைகளின் கீழ் உள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு உக்ரைன் தான் மூளையாக செயல்பட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார்.
போர் தொடங்கியதிலிருந்து பல உயர்மட்ட ரஷ்ய இராணுவ அதிகாரிகளின் கொலைக்கு பொறுப்பேற்றுள்ள உக்ரைன, இந்த விவகாரத்தில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.



