யாழ் மாநகர சபை உத்தியோகத்தர்களை விமர்சிப்பது தொடர்பாக தங்கள் அவதானிப்புகளை கடிதம் மூலம் அறிவிக்குமாறு கோரி வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் மாநகர சபை முதல்வருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நிதி நிர்வாக சுற்றறிக்கைக்கு முரணாக யாழ் மாநகர சபையில் எடுக்கப்படும் தீர்மானங்களும் அதனை நிறைவேற்றுவதற்கான உத்தியோகத்தர்களுக்கான அழுத்தங்களும் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநருக்கு யாழ் மாநகர சபை பதவி நிலை உத்தியோகத்தர்களால்
கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. அது தொடர்பில் விளக்கம் கோரும் வகையில் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜாவுக்கு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நேற்று இடம் பெற்ற மாநகர சபை அமர்வில் மாநகர சபை முதல்வர் குறித்த விடயத்தை வெளிப்படுத்தினார்.
நிதி நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் சுற்றறிக்கைகளை மீறி சபையினால் எடுக்கப்படும் தீர்மானத்தை எடுத்து அதனை நிறைவேற்றுமாறு தொடர்ச்சியாக தங்களால் உத்தியோகத்தர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாகவும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் அனைவரும் சபை அமர்வுகளில் பங்கேற்க வேண்டும் எனவும் கூறி அவர்களுக்கு விதிமுறைகளுக்கு முரணாக சபை உறுப்பினர்கள் கேள்வி கேட்பதும் விமர்சிப்பதும் இதனால் அவர்களுக்கு அசௌகரியங்களுக்கும் மன உளைச்சலுக்கு உள்ளாவதாகவும் நிர்வாக விடயத்தில் உறுப்பினர்கள் தலையிடுவதாலும் சபையின் நிர்வாகச் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுப்பதற்கு தடையாக உள்ளதாகவும் முறையிட்டுள்ளனர் என தெரிவித்தார்.
மேலும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் தொடர்பில் தரக்குறைவான வார்த்தை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு அவமானப்படுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாநகரம் முதல்வர் கடிதத்தை வாசித்த பின்னர் மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை பதவி நிலை உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் தொடர்பாக கடும் அதிருப்தி வெளியிட்டனர்.
சுற்றுநிருபங்களையும் நியம துணை விதிகளையும் வைத்து உத்தியோகத்தர்கள் எழுத்து மூலம் செயல்படும் போது நாங்களும் எதிர்வரும் காலங்களில் சுற்றுநிருபங்களையும் நியம துணை விதிகளையும் வைத்து செயல்பட வேண்டி வரும் என மாநகர சபை உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.



