முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கின்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இணைந்து பல பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு பாலியல் சேட்டை புரிந்து பாலியல் துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர், அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்காக நியமிக்கப்பட்டு ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த நிலையில், குறித்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சிலர் இணைந்து மாணவிகள் பலரின் நிர்வாண புகைப்படங்களை வைத்து அச்சுறுத்தி அவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.
இவ்வாறு ஆசிரியரும் மாணவர்கள் சிலரும் செய்த சேட்டையை முல்லைத்தீவு இளைஞர்கள் கண்டறிந்து, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தொலைபேசியை எடுத்து பார்வையிட்டுள்ளனர்.
அதன்போது பல மாணவிகளின் நிர்வாண வீடியோக்கள் மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் மாணவிகளுடன் தவறான முறையில் நடந்து கொண்ட வீடியோக்கள் இருப்பதை அவதானித்து அதனை சோதித்தபோது அந்த ஆசிரியரும் மாணவர்களும் இந்த செயற்பாடுகளில் தொடர்பு கொண்டிருந்தமை தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர், குறிப்பிட்ட மாணவர்களைப் பயன்படுத்தி மாணவிகளை காதல் வலையில் விழுத்தி, அவர்கள் ஊடாக மாணவிகளின் நிர்வாண புகைப்படங்களை பெற்று ஆசிரியரும் அந்த மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான பின்னணியில் இந்த ஆசிரியருடைய தொலைபேசியில் இருந்த ஆவணங்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலரை பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
குறித்த ஆசிரியர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
அந்தவகையில் விசாரணைகளின் முடிவில் அவர் நேற்றையதினம் பணி நீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.




