மட்டக்களப்பு வவுணதீவில் தீயை காட்டினால் அழியும் மை கொண்ட பேனாவினால் கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்தில் இருந்து நுகர்வோர் வரை எடுத்துச் செல்வதற்கான மணல் போக்குவரத்துக்கான அனுமதி பத்திர விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உழவு இயந்திரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை கொழும்பில் இருந்து வந்த புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் சோதனை பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை (17) கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் சோதனை பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சம்பவ தினமான நேற்று பகல் பணியகத்தின் கொழும்பில் இருந்து வந்த சோதனை பிரிவினர் வவுணதீவு பிரதேசத்தில் வீதியால் மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தை நிறுத்தி அனுமதிப்பத்திரத்தை சோதனை செய்தனர்.
இதன் போது பேனாவினால் நிரப்பபட்ட அந்த அனுமதி விண்ணப்ப படிவத்திற்கு அருகில் தீயை காட்டி சோதனை செய்த போது அது அழியும் மையினால் கொண்ட பேனாவால் நிரப்பப்பட்டு ஒரு உழவு இயந்திரத்திற்கு 6 போலி அனுமதி பத்திரத்தை போலியாக பூர்த்தி செய்து சட்டவிரோதமாக மண் அகழ்ந்து அதனை கடத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.
அதேவேளை வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தை நிறுத்தி சோதனையின் போது போலியாக தயாரித்த அனுமதிப்பத்திரம் என கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவரையும் கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் இரு உழவு இயந்திரங்களையும் எடுத்து சென்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-கனகராசா சரவணன்-




