காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியூட்டக்கூடியது என்றும், ஆழ்ந்த வருந்தத்தக்கது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
திங்கள் கிழமையன்று(25.8.2025) கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். நாசர் மருத்துவமனையை இரண்டு ஏவுகணைகள் தாக்கியதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஹுசாம் அல்-மஸ்ரி, மரியம் அபு டாகா, மோஸ் அபு தாஹா, முகமது சலாமா மற்றும் அகமது அபு அஜீஸ் ஆகிய பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் ராய்ட்டர்ஸ் மற்றும் அசோசியேட்டட் பிரஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்காகப் பணியாற்றி வந்தனர்.
பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் சர்வதேச அளவில் கண்டனத்தை எதிர்கொள்கின்ற நிலையில் இந்தியாவும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.




