முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமிலிருந்த சிப்பாயொருவருக்கு கஞ்சா, கசிப்பு கொடுத்து அங்கு திருட்டில் ஈடுபட்டவர்களில் ஒருவர், இராணுவத்திடமிருந்து தப்பி வந்த பின்னர் முத்துஐயன்கட்டு குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், இராணுவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடத்துமாறு எம்.ஏ.சுமந்திரன் விடுத்த அழைப்புக்கு மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட பாதிரியார்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதையடுத்து, தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
15ஆம் திகதி கடையடைப்பு நடத்துமாறு சுமந்திரன் விடுத்த அழைப்புக்கு கண்டனம் தெரிவித்து, மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் தமிழ் நேசன் அடிகளார் அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பில்-
ஆவணி மாதம் 15ஆம் திகதி மடுத்திருத்தலத்தின் பிரதான திருவிழா அன்று வடக்கு கிழக்கில் அறிவிக்கப்பட்டிருக்கும் ஹர்த்தாலை ஏற்றுக்கொள்ள முடியாது.
தேசிய ரீதியில் இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் இருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் வருகைதரும் திருவிழா நாளில் இந்தக் ஹர்த்தாலை ஏற்பாடு செய்திருப்பதானது ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல கண்டனத்திற்கும் உரியது.
ஹர்த்தாலுக்கான காரணங்களை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதற்கு நாம் ஆதரவாக இருக்கின்றோம்.
இன்று மட்டுமல்ல மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் காலத்திலும் மன்னார் மறைமாவட்டத் திருச்சபை குறிப்பாக மன்னார் குருக்கள் ஆயரோடு இணைந்து தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்துள்ளனர்.
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அனைத்து வகையான அநீதிகளுக்கு எதிராகவும் போராடியுள்ளனர். இதை முழு உலகமும் அறியும். இந்த நிலையில் மடுத்திருப்பதியின் ஆவணித் திருவிழாவை கவனத்தில் கொள்ளாமல் இலங்கைவாழ் கத்தோலிக்க மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் எடுக்கப்பட்ட இத்தீர்மானம் எமக்கு மிகுந்த கவலை அளிப்பதாகவுமஏமாற்றம் அளிப்பதாகவும் உள்ளது.
இவ்வேளையில் வரலாற்று ரீதியான சில விடயங்களையும் சுட்டிக்காட்ட விழைகின்றோம். யுத்தம் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில்கூட மடுத்திருப்பதியின் திருவிழாக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
அன்றைய அரசாங்கங்களும் சரி தமிழீழ விடுதலைப் புலிகளும் சரி இத்திருவிழாக்களை எந்த இடையூறும் இல்லாமல் நடத்துவதற்கு தமது பூரண ஆதரவை ஒத்துழைப்;பை வழங்கிவந்தனர் என்பதை இவ்வேளையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் குறிப்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த ஹர்த்தாலை திருவிழாவுக்குப் பின்னர் வேறொரு நாளுக்கு பின்போடுமாறு வினயமாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.
புதிய திகதிக்கு இந்தக் ஹர்த்தால் மாற்றப்படும்போது வழக்கம்போல மன்னார் மறைமாவட்டடத் திருச்சபை இதற்கான பூரண ஆதரரவை வழங்கும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.
எமது இந்தக் கோரிக்கையை ஏற்று உடனடியாக புதிய திகதியை அறிவிக்குமாறு திரு. சுமந்திரன் அவர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் கிறிஸ்துநேசன் அடிகளார் இவ்வாறு தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, கதவடைப்பை பிறிதொரு திகதிக்கு மாற்றுவதாக சுமந்திரன் அறிவித்தார்.
எனினும், சுமந்திரனின் புதிய கதவடைப்பின்போது நல்லூர் பெருந்திருவிழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



