அக்மீமன-ஹினிதுங்கொடவில் பெண்ணை மோதி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 16 வயது பாடசாலை மாணவனை அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை கிதுலம்பிட்டி சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர் நேற்று (25) காலி கூடுதல் நீதவான் லக்மினி விதானகமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் (24) அக்மீமன-ஹினிதுங்கொடவில் நடந்த வீதி விபத்தில் ஒரு பெண் தனது காலின் ஒரு பகுதியை இழந்தார்.
சந்தேக நபர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் அந்தப் பெண் காயமடைந்தார். விபத்தில் அவரது ஒரு கால் கணுக்காலுக்கு மேலே துண்டிக்கப்பட்டது.
காலின் துண்டிக்கப்பட்ட பகுதி மோட்டார் சைக்கிளில் சிக்கியிருந்ததாகவும், சம்பந்தப்பட்ட மாணவர் மோட்டார் சைக்கிளுடன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளுடன் தப்பிச் சென்ற மாணவன் வீடு திரும்பிய பிறகு மோட்டார் சைக்கிளில் சிக்கியிருந்த கால் பகுதியைப் பார்த்ததாகவும், பின்னர் அதை ஒரு துணியில் சுற்றி பற்றைக்குள் வீசி மோட்டார் சைக்கிளை சுத்தமாகக் கழுவியதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
விபத்து குறித்து விசாரணை நடத்தத் தொடங்கிய பொலிசார், சந்தேக நபரைக் கைது செய்து, மாணவன் பற்றைக் காட்டில் வீசிய பெண்ணின் பாதத்தின் பகுதியைக் கண்டுபிடித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.



