யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்படும் பகுதி மனிதப்புதைகுழியா என்பதை ஆராயும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரத்தில் சமூக ஊடகவாசிகளால் பரப்பப்படும் தவறான தகவல்களினால் ஏற்படும் விளைவுகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செம்மணியில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்படும் விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் (ஜூலை 15) யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இந்த விவகாரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, சட்டத்தரணிகள் சிலரின் நடத்தையில் அதிருப்தி தெரிவித்த நீதிவான், புதிய அகழ்வு பணியில் புகைப்படங்கள் எடுத்து, அதை வைத்து கவிதைகள் எழுதிக்கொண்டிருக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில், தவறுகள் ஏதேனும் இனியும் நடக்காமல் பார்த்துக்கொள்வதாக சட்டத்தரணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, தவறான தகவல்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது. புத்தகப்பையுடன் சிறுமியொருவரின் எலும்புக்கூடு மீட்கப்பட்டிருந்தது. இந்த எலும்புக்கூடு சிறுமியுடையது, 4 – 5 வயதுக்கு இடைப்பட்டவர் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.
எனினும், சமூக ஊடகங்களில், சிறுவனுடைய எலும்புக்கூடு என குறிப்பிட்டு, ஏஐ தொழில்நுட்பம் மூலம் தவறான புகைப்படங்களும் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டிருந்தது.
இதேவேளை, செம்மணி அகழ்வின் போது, தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் உதவியாளராக செயற்பட்ட சிங்கள பெண் ஒருவர், அகழ்வு பணியின் போது சிரித்துக்கொண்டிருப்பதாக புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. அந்த புகைப்படத்தை வைத்து கவிதையும் எழுதினார் இன்னொருவர். இந்த இரு சம்பவங்களும் சட்டத்தரணிகள் வட்டத்துக்குள்ளேயே நிகழ்ந்தது. இது சமூக ஊடகங்களில் வைரலாகியதையடுத்து, மனஉளைச்சலுக்கு உள்ளான அந்த பெண், அகழ்வு பணியிலிருந்தே விலகிச் சென்றுவிட்டார்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி, இந்த விவகாரத்தையும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த விவகாரங்களையடுத்து, அகழ்வு பணியின் போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. புகைப்படம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள் தரப்பில் புகைப்படம் எடுக்க அனுமதி கோரப்பட்ட போது, “புகைப்படம் எடுத்து கவிதைகள் எழுதி பகிர்ந்து கொண்டிருக்காதீர்கள்“ என நீதிவான் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் இனி தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது.
அகழ்வு பணியை படம்பிடிக்க செய்தியாளர்களுக்கும் 20 நிமிடங்கள் அனுமதி வழங்கப்படவுள்ளது.



