தீவகத் தொகுதிக்குட்பட்ட நெடுந்தீவு, வேலணை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபைகளில் ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைப்பதை மக்கள் விரும்பவில்லை என்பதால் நாம் தனித்து ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என, மேற்குறித்த மூன்று சபைகளுக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளனர்.
தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தீவகத்தின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும், கட்சியின் தீவகத் தொகுதிக் கிளை உறுப்பினர்களும், தொகுதிக் கிளைத் தலைவர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்களை நேற்றையதினம் அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சிவஞானம் சிறிதரனது பேஸ்புக் பதிவில்-
ஈழ விடுதலைப் போராட்டத்தைச் சிதைப்பதற்காகவும், அப்போராட்டத்திற்கு எதிராகவும் வலிந்து செயற்பட்ட ஈ.பி.டி.பியினரும் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் தீவக மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களை மறந்து, தவிசாளர் – உப தவிசாளர் பதவிகளுக்காக அவர்களோடு இணைய முற்பட்டால் மக்களுக்கும் எமக்கும் இடையிலான இடைவெளிகள் அதிகரிக்கும் எனக் குறிப்பிட்ட மேற்படி உறுப்பினர்கள், அதனைத் தவிர்த்து சபைகளில் தனித்து ஆட்சியமைப்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களோடு கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது- என தெரிவிக்கப்பட்டுள்ளது.



