மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் முதலை இழுத்துச் சென்ற நபர் இரண்டு நாட்களின் பின் இன்று (22) இடுப்பு மேற் பகுதியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
நேற்று முன்தினம் (20) மந்திரியாறு நீரோடை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போதே முதலை இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு முதலை இழுத்துச் சென்றவர் சுங்கான்கேணி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் குடும்பஸ்தரான வி.கிருஸ்ணதீபன் (அசோக்) என தெரிய வந்துள்ளது.
முதலை இழுத்துச் சென்ற இளம் குடும்பஸ்தரை கடந்த இரு நாட்களாக குடும்ப உறவுகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தேடும் பணிகளில் ஈடுபட்டனர். இதன்போது காலை இடுப்புக்கு கீழ் பகுதி அற்ற நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப் பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-கிரான் நிருபர் –




