வவுனியா, மதவாச்சி பகுதிகளில் 5 மோட்டார் சைக்கிள்களை திருடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிசார் தெரிவித்தனர்.
இம்மாதம் வவுனியா, ஈரப்பெரியகுளம், செட்டிகுளம், முதலாம் குறுக்குத் தெரு, மதவாச்சி – அட்டவீரக் கொட, மதவாச்சி ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன.
குறித்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது சிதம்பரபுரம் வீதி, ஈரப்பெரியகுளம் பகுதியில் வசிக்கும் 27 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த 5 மோட்டார் சைக்கிள்களும் முறையே 550,000, 299,500, 500,000, 300,000, 970,000 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டிருந்தமை தெரியவந்தது.
இதனையடுத்து குறித்த 5 மோட்டார் சைக்கிள்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட இளைஞரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.



