எதிர்வரும் வட மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதில் ஆர்வமுள்ளதை எம்.ஏ.சுமந்திரன் மீளவும் வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் (10) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைப்பது பற்றி நடந்த கலந்துரையாடலில் இதனை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், கந்தரோடையிலுள்ள த.சித்தார்த்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இதில் த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மு.சந்திரகுமார் ஆகியோருடன், எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்றிருந்தார்.
இதன்போது, எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் வடமாகாணத்தில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க விருப்பமுள்ளதை எம்.ஏ.சுமந்திரன் வெளிப்படுத்தினார்.
சி.சிறிதரன் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கா விட்டால், தான் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவேன் என குறிப்பிட்டார்.
இதேவேளை, கடந்த சில மாதங்களாக தனிப்பட்ட கலந்துரையாடல்களில் இதே விதமான கருத்தை எம்.ஏ.சுமந்திரன் வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
க.வி.விக்னேஸ்வரன் போல, அரசியலில் பரிச்சயமற்றவர்களை வெறும் மக்கள் கவர்ச்சிக்காக முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவதை விட, எம்.ஏ.சுமந்திரன் பொருத்தமான முதலமைச்சராக இருப்பார் என்பதே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலானவர்களின் அப்பிராயமாக உள்ளது.




