உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைப்பது குறித்து இலங்கை தமிழ் அரசு கட்சியும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் இன்று (11) நேரில் கலந்துரையாடல் நடத்தியுள்ளனர்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான த.சித்தார்த்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், மு.சந்திரகுமார், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருடன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் பேச்சு நடத்தினார்.
இலங்கை தமிழ் அரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைப்பதற்கு அப்பால், தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக ஆட்சியமைக்கலாமா என பேச்சு நடத்தவே முதல் விருப்பத்தை கொண்டிருப்பதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன், ஓரிரு நாட்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் பேச்சு நடத்தவுள்ளனர்.
இந்த பேச்சுக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி சம்மதிக்காவிட்டால், தமிழ் அரசு கட்சியும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து தொடர்ந்து கலந்துரையாடல் நடக்கும்.
இன்றைய சந்திப்பு பயனுள்ள விதத்தில் அமைந்ததாக சந்திப்பில் கலந்து கொண்ட இரு தரப்பு வட்டாரங்களும் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணங்காவிட்டாலும், இந்த இரண்டு தரப்புக்களும் இணைவதை பெரும்பாலும் இன்றைய சந்திப்பில் உறுதி செய்துள்ளனர். என்னவிதமான உடன்படிக்கையின் கீழ் இணைவது என்பதை உறுதி செய்ய மேலும் ஒரு சந்திப்பு அடுத்த ஓரிரு நாட்களில் நடக்கவுள்ளது.
இணைந்து ஆட்சியமைப்பதெனில் சில சபைகளின் ஆளுகையை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கோரியுள்ளதாக தமிழ் பக்கம் அறிந்தது. இந்த விவகாரத்தில் கட்சிக்குள் கலந்துரையாடல் நடத்தி விட்டு, பதிலளிப்பதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.




