இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட குழு உறுப்பினர் பூலோகராசா சிறீதரன் என்பவரால் குறித்த முறைப்பாடு இன்று பதிவு செய்யப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர சபை முதன்மை வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன் யாழ் மாநகர சபையின் உறுப்பினராக கூட வர முடியாது என அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளம் மூலம் சுமந்திரன் கருத்து தெரிவித்தாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகரசபை பிரதேசத்துக்குள் வசிக்காத கபிலன், யாழ் மாநகரசபை உறுப்பினராக வந்தால் வழக்கு தொடர்வோம் என பேட்டியொன்றில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார். அது சாதாரண கருத்து. அதை அச்சுறுத்தல் என ஜேவிபியினர் முறைப்பாடு செய்வது, தமக்கு எதிரான குரல்களை அடக்கும் அச்சுறுத்தல் முயற்சியா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.




