இளவாலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சிசபை வேட்பாளரின் ஆதரவாளர்களான இளைஞர்கள் குழுவொன்று, மதுபோதையில் அயல்வீட்டுக்காரை தாக்கியதாக முறையிடப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை விசாரிக்க சென்ற பொலிசாரை வீடியோ எடுத்து, பொலிசார் அத்துமீறல் என வேட்பாளர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இளவாலை சென் ஜூட் கிராமத்தில் இந்த சம்பவம் இன்று (4) இரவு நடந்தது.
வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபைக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளரின் சகோதரி வீட்டில் இன்று மாலை இளைஞர்கள் குழுவொன்று குழுமியுள்ளது. அங்கிருந்த இளைஞர்கள் மதுபோதையில் தாக்கியதாக, பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு அயல்வீட்டுக்காரர்கள் முறையிட்டுள்ளனர்.
இதையடுத்து, இளவாலை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 4 உத்தியோகத்தர்கள் முறைப்பாட்டாளர் வீட்டுக்கு சென்று, நடந்த சம்பவத்தை விசாரித்தனர். முறைப்பாடு இருப்பின் இளவாலை பொலிஸ் நிலையத்துக்கு வந்து முறைப்பாடு செய்யுமாறு அவர்களுக்கு தெரிவித்து விட்டு, எதிராளிகள் குழுமியிருந்த வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால், விசாரணைக்காக இளவாலை பொலிஸ் நிலையம் வருமாறு அறிவித்தல் கொடுத்துள்ளனர்.
இந்த பின்னணியில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பெண் வேட்பாளர், பொலிசாரின் அத்துமீறிய அடாவடியென சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் 4 பொலிசார் சிவில் உடையில் அமைதியாக நடந்து கொள்ளும் காட்சிகளே உள்ளன. எதிராளிகளை பொலிஸ் நிலையம் வருமாறே அதில் பொலிசார் குறிப்பிடுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிசாரை தமிழ் பக்கம் தொடர்பு கொண்ட போது, 119 இலக்க முறைப்பாட்டின் அடிப்படையில் முறைப்பாட்டாளர் மற்றும் எதிராளியின் வீட்டுக்கு சென்று, இரு தரப்பையும் பொலிஸ் நிலையம் வருமாறு அறிவித்தல் மட்டுமே கொடுத்ததாகவும், எதிராளிகள் தரப்பில் அதிகமான இளைஞர்கள் மதுபோதையில் நின்றதால், வெறும் கையுடன் சென்ற பொலிசார், அந்த வீட்டு வாசலுக்கு அண்மையில் இருந்த தடியொன்றை எடுத்து சென்றதாகவும் குறிப்பிட்டனர்.
எனினும், எதிராளி தரப்பிலிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர், இந்த விவகாரத்தை அரசியல் விவகாரமாக்க முயலவதாகவும் தெரிவித்தனர்.



