ஈழத் தமிழ் பின்புலத்தில் காமெடி ஏன்? – சசிகுமார் பகிரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’அனுபவம்

Date:

அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், எம்.எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. மே 1-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிம்ரன் தவிர்த்து இதர படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.

இந்த விழாவில் சசிகுமார் பேசும்போது, “இந்தப் படத்தை பார்த்த தயாரிப்பாளருக்கு முழு திருப்தி என்றாலும், ரசிகர்களிடம் கிடைக்கும் ஆதரவுக்காகத்தான் சற்று பதற்றத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். படத்தைப் பற்றி படக்குழுவினர் பேசுவதை விட, படத்தை பார்க்கும் ரசிகர்களும், ஊடகங்களும் பேச வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

தயாரிப்பாளர்கள் இருவரும் நண்பர்கள். அந்த ஒரு காரணத்தினாலேயே அவர்களை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர்கள் எடுத்த ‘குட்நைட்’, ‘லவ்வர்’ என்ற இரண்டு படங்களும் அனைவரும் ரசித்த படங்கள். அதனால் அவர்கள் கதையை தேர்வு செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள் என நினைத்து, நான் தான் இந்த படத்தில் படத்திற்குள் வந்தேன். இது எனக்கு தான் பெரிய விஷயம்.

கதை சொல்லும் போது இயக்குநர் என்னென்னவோ செய்து காண்பித்தார். நான் அதை கவனித்துக் கொண்டே இருந்தேன். இயக்குநருடன் வந்த தயாரிப்பாளர் யுவராஜ் ரியாக்‌ஷன் செய்து கொண்டே இருந்தார். நான் அவரையும் அமைதியாக கவனித்துக் கொண்டே இருந்தேன். இருந்தாலும் நான் இது போன்றதொரு நல்ல கதையை கேட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. என்னிடம் சொன்ன கதையை சிறிது மாற்றாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள். இது இயக்குநர் அபியின் வெற்றியாக நான் நினைக்கிறேன்.

எனக்கு ஜோடியாக சிம்ரன் மேடம் நடிக்கிறார்கள் என்று சொன்னவுடன் உற்சாகமாகி விட்டேன். அவர்களுக்கும் இந்தக் கதை பிடித்திருந்தது. அதனால் நடிக்க சம்மதம் தெரிவித்தார்கள். எல்லோருக்கும் சிம்ரன் பிடிக்கும் இந்தப் படத்திலும் சிம்ரன் நடிப்பு அனைவருக்கும் பிடிக்கும். அவர்களும் இந்தப் படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திலும் அவர் ஹீரோயின். நான் ஹீரோ. அதனால் அவர்கள் இப்போது கூட ஹீரோயினாக நடிக்கலாம்.

இந்தக் கதை எனக்கு ஏன் பிடித்தது என்றால், இந்த கதையின் நாயகன் ஈழத் தமிழ் பேசுபவன். ஈழத்திலிருந்து ஒரு குடும்பம் இங்கு வந்து எப்படி தங்களுடைய வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை. இதை பார்க்கும்போது காமெடியாக இருக்கும்.

பொதுவாக, ஈழத் தமிழர்களைப் பற்றிய படம் என்றால், அது சோகமாகவும், வலி மிகுந்ததாகவும் இருக்கும். ஆனால், இந்தப் படம் சந்தோஷமாக இருக்கும். ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கும். ஆனால், உள்ளுக்குள் ஒரு வலியையும், விஷயத்தையும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். வலியை மறைத்து தான் நாம் சந்தோஷத்தை கொடுக்க முடியும். அந்த வகையில் இந்த குடும்பம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும்.

அவர்கள் அடுத்த தலைமுறையினருக்காக கஷ்டப்படுகிறார்கள். நாம் படும் கஷ்டங்கள் நம்முடைய தலைமுறையினர் படக்கூடாது. குழந்தைகளை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என பெற்றோர்கள் நினைக்கிறார்கள் . இதனால் தங்களுக்குள் உள்ள வலியை மறந்து, மறைத்து அவர்களுக்காக வாழ்கிறார்கள். இந்தப் படம் உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் பொருந்தும். அனைவருக்கும் பொருந்தும்.

உலகத்தில் உள்ள ஈழத் தமிழர்கள் இப்படத்தை பார்க்கும் போது நம்முடைய கலாச்சாரத்தையும், நம்முடைய தமிழ் மொழியையும் மறந்துவிடாமல் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இந்த எண்ணம் குறைந்தபட்சம் பத்து பேருக்கு ஏற்பட்டாலும் வெற்றிதான். இதை உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் தங்களுடைய குடும்பத்துடன் வந்து பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது ஒரு ஃபீல் குட் மூவி.

இயக்குநரிடம் இதற்கான இன்ஸ்பிரேஷன் எது என்று கேட்டபோது அவர் ‘தெனாலி’ திரைப்படம் என்றார். அதனால் இந்தத் திரைப்படம் பார்க்கும்போது ‘தெனாலி’, ‘மொழி’ போன்ற படங்கள் நினைவுக்கு வரலாம் என நம்புகிறேன்.

இந்தப் படத்தில் என்னுடைய மூத்த மகனாக நடித்திருக்கும் மலையாள நடிகர் மிதுன் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கமலேஷ் என ஒரு குழந்தை நட்சத்திரம் நடித்திருக்கிறார். அவர்தான் இந்த படத்திற்கு காமெடி. அவர்தான் உங்கள் அனைவரையும் சிரிக்க வைக்கப் போகிறார். இந்த படத்தில் பாடல்களும், இசையும் நன்றாக இருக்கிறது. இந்தப் படம் அன்பை போதிக்கிறது” என்று பேசினார் சசிகுமார்.

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலையில் நிவாரணம்? உலக எண்ணெய் விலை சரிவால் அரசின் முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம்...

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்