இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஊழலற்ற உள்ளுராட்சி மன்ற நிர்வாகங்களை தெரிவு செய்வதற்கு மக்கள் சங்கிற்கு வாக்களிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற கரைச்சி பிரதேச சபையில் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
தமிழ் தரப்புக்கள் பல தரப்புக்களாக பிரிந்து நின்று தேர்தல்களில் முகம்
கொடுப்பது என்பது தமிழ் மக்களை மேலும் மேலும் பலவீனப்படுத்தும் கடந்த பாராளுமன்ற தேர்தல் எங்களுக்கு இதனை ஒரு பாடமாக உணர்த்தியிருக்கிறது. அந்த வகையில்தான் நாம் இந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக ஒரணியில் தேர்தலில் சங்கு சின்னத்தில்
போட்டியிடுகின்றோம். சங்கு தமிழ் மக்களுக்கான ஒரு பொதுச் சின்னம் அது தமிழ் மக்களுக்கான பலமான சின்னம் இந்த சின்னத்திற்கு வாக்களிப்பது மூலம் தமிழ் மக்கள் ஒரணியில் ஒற்றுமையாக நிற்பதனை வெளிப்படுத்த முடியும். அதுவே
எங்களுக்கான அரசியல் பலமும் ஆகும்.
அத்தோடு கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் இந்த மாவட்ட மக்கள் ஊலற்ற வினைத்திறனான உள்ளுராட்சி மன்ற நிர்வாகங்களை ஏற்படுத்த முடியும். கடந்த காலங்களில் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களில் இருந்தவர்கள் செய்த ஊழல் மோசடிகள் ஏராளம் அதனை பலரும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெற்று மக்கள் முன் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். எனவே கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களிடம் மீண்டும் அதிகாரத்தை மக்கள் ஒப்படைத்தால் அது ஊழல் மோசடிகள் நிறைந்த சபையாக மட்டுமே காணப்படும், மக்களின் வரிப்பணம் மோசடி செய்யப்படும், வினைத்திறனற்ற
நிர்வாகம் உருவாகும் ஆகவே மக்கள் கடந்த காலத்தை கருத்தில் கொண்டு இந்த தேர்தலில் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து வெறிப்பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். எனத் தெரிவித்தார்.



