முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தனவுக்குச் சொந்தமான அத்தனகல்ல பகுதியில் உள்ள 25 ஏக்கர் காணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், டி-56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஒரு தொகை ஆயுதங்கள், பேலியகொட குற்றப்பிரிவு பொலிசாரால் நேற்று (11) கைப்பற்றப்பட்டன.
இந்த ஆயுதங்கள் விடுதலைப் புலிகளிடமிருந்து பெறப்பட்டதாக சந்தேகிப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். மிகவும் பாதுகாப்பாக புதைக்கப்பட்ட ஆயுதங்களில் ஒரு T-56 துப்பாக்கி, 130 தோட்டாக்களுடன் இரண்டு மகசின்கள், 12-போர் துப்பாக்கி மற்றும் அதற்கான ஆறு தோட்டாக்கள் இருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்தக் காணியில் மேலும் 4 T56 துப்பாக்கிகள் உட்பட ஒரு தொகை ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பேலியகொட குற்றப்பிரிவினர் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த ஆயுதங்களை மறைத்து வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன, பேலியகொட குற்றப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நாமல் குணவர்தன, 2000 ஆம் ஆண்டு பொட்டா நௌபர் என்ற பாதாள உலகத் தலைவர் உள்ளிட்ட குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக சஞ்சய சிறிவர்தனவின் பெயரும் குறிப்பிடப்பட்டது. சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சஞ்சய சிறிவர்தன லொத்தர் சபையின் தலைவராகவும் பணியாற்றினார்.